×

போலீஸ் உதவியுடன் திருமணம் நிறுத்தம் தாலிகட்டும் முன் காதலனை கைபிடித்த மணப்பெண்

அயோத்தியாப்பட்டணம்: சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த சோமம்பட்டியை சேர்ந்த மல்லிகா மகன் லோகநாதன் (27). எம்பிஏ., பட்டதாரியான இவருக்கும், மின்னாம்பள்ளியை சேர்ந்த சேகர் மகள் சுவேதா (21) என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, நேற்று காலை திருமணம் நடைபெற இருந்தது. இந்த திருமணத்தில் மணப்பெண் சுவேதாவிற்கு விருப்பம் இல்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் சுவேதாவை கட்டாயப் படுத்தி திருமணம் நடத்தப்படுவதாக, அவரது காதலரான கவியரசன் என்ற வாலிபர், வாழப்பாடி மற்றும் காரிப்பட்டி போலீசில் புகார் தெரிவித்தார். இதையடுத்து சேசன்சாவடியில் உள்ள தனியார் மண்டபத்திற்கு கவியரசனுடன் சென்ற வாழப்பாடி மகளிர் போலீசார், அங்கு முகூர்த்தத்துக்கு தயாராக இருந்த மணப்பெண் சுவேதாவிடம் விசாரித்தனர். அப்போது அவர் போலீசாரிடம், தனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என தெரித்துள்ளார். இதை கேட்ட மணமகன் வீட்டார் மற்றும் உறவினர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து போலீசார் திருமணத்தை நிறுத்தி மணப்பெண் சுவேதா மற்றும் புகார் அளித்த காதலன் கவியரசன் ஆகிய இருவரையும் பாதுகாப்பாக போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அதில், இருவரும் 4 ஆண்டுகளாக காதலித்து வந்து உள்ளனர். காதலுக்கு சுவேதா வீட்டார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். லோகநாதன் என்பவருடன் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இந்த திருமணம் நடந்தால் தற்கொலை செய்து கொண்டு இறந்து விடுவேன் என்று சுவேதா காதலனிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, காதலன் போலீசில் புகார் அளித்தது தெரியவந்து உள்ளது. விசாரணைக்கு பின் காதலன் கவியரசனுடன் சுவேதாவை பாதுகாப்பாக வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

The post போலீஸ் உதவியுடன் திருமணம் நிறுத்தம் தாலிகட்டும் முன் காதலனை கைபிடித்த மணப்பெண் appeared first on Dinakaran.

Tags : Ayothiyapattanam ,Lokanathan ,Mallika ,Somambatti ,Salem district ,Dinakaran ,
× RELATED அட்சய திருதியையொட்டி தஞ்சாவூர்...